என் தேவன்
B.A. Manakala
என் தேவன் தம்முடைய கிருபையினால் என்னைச் சந்திப்பார்; தேவன் என் சத்துருக்களுக்கு வரும் நீதி சரிக்கட்டுதலை நான் காணும்படி செய்வார். சங். 59:10.
"இவர்கள் என்னுடைய அம்மா" என்று அவளுடைய குழந்தைகளுள் ஒன்று, அவளைக் கட்டி அணைத்துக் கொண்டு கத்தியது. இதைக் கேட்டவுடனே, ஒன்றன் பின் ஒன்றாக வேறு இரண்டு உடன்பிறப்புகள் அவளிடம் ஓடிச் சென்று, அதே போல் உரிமை கொண்டாடத் தொடங்கின. அந்தத் தாய், அவர்கள் எல்லாரையும் ஒருமிக்க பிடித்துக் கொண்டு, "நீங்கள் எல்லாரும் என்னுடையவர்கள்" என்று கூறின போது தான் அந்தச் சண்டை நின்றது.
தாவீதுக்கு, தேவனோடு தனிப்பட்ட உறவு இருந்ததினால் தான், அவரை 'என் தேவன்' என்று நம்பிக்கையோடு குறிப்பிடுகிறார். தேவன் உங்களோடும் என்னோடும் தனிப்பட்ட விதத்திலே, நெருங்கிய உறவு வைத்துக் கொள்ள விரும்புகிறார். அவர், தனிப்பட்ட உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே, முதன்முதலாக 'ஆதாம்' என்ற ஒரே ஒரு மனிதனை மட்டும் உருவாக்கினார். அவர் உங்களையும் கூட அதே நோக்கத்தோடு தான் சிருஷ்டித்தார் என்று நீங்கள் நம்புகிறீர்களா? நீங்கள் அவரை 'என் தேவன்' என்று குறிப்பிட்டு அழைப்பதைக் கேட்க, அவர் விரும்புகிறார்.
தேவனும் கூட, உங்களையும் என்னையும், 'என் பிள்ளை' என்றே குறிப்பிடுகிறார். அவர் உங்களைப் பேர் சொல்லி அழைக்கிறார் (ஏசா. 43:1). அவருடைய நெருங்கிய உறவைப் பற்றி, பின்வரும் வசனங்களில் மேலும் வாசித்து அறியுங்கள் (வச. 2-13).
தேவனை, 'என் தேவன்' என்று அழைக்கிறதன் மூலம், நீங்கள் எவ்விதம் அவரோடு தொடர்பில் இருக்கலாம்?
தேவன் எப்போதும் உங்களை, 'என் பிள்ளை' என்றே அழைக்கிறார். நீங்கள், 'என் தேவனே' என்று பதிலளிப்பீர்களா?
ஜெபம்: கர்த்தாவே, எப்போதும் உம்மோடு 'என் தேவன்' என்ற தொடர்பிலேயே இருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்!
(translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment