தடுமாறினாலும் தடுக்கி விழுவதில்லை!
Wednesday, April 07, 2021
B.A. Manakala
அவன் விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை. கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார். சங் 37:24.
கர்த்தர் நம் கையைப் பற்றிப் பிடித்திருக்கையிலும் கூட, நாம் தடுமாற ஏதுவுண்டு என்பதை நம்ப முடியாதிருக்கலாம்! ஆயினும்..., அவர் நம்மைக் கீழே விழவிட மாட்டார் என்று அதே வசனம் கூறுகிறது. நிச்சயமாகவே நம்மேல் தேவ பாதுகாப்பு இருக்கிறது. அவர் உங்களை விட்டு விலகுவதுமில்லை. உங்களைக் கைவிடுவதுமில்லை (உபா. 31:6). அவர் உங்கள் கால்களைத் தள்ளாட வொட்டார் (சங். 121:3). ஆயினும்..., தேவனுடைய பயிற்சியின் ஒரு பகுதியாக, நாம் அடிக்கடி தடுமாற நேரலாம். ஒருமுறை, இயேசுவே தம் சீஷர்களை அக்கறைக்குப் போகும்படி அனுப்பியிருந்தும், கடலிலே கடும்புயலை அவர்கள் எதிர்கொள்ள நேர்ந்தது (மத். 14:22-33). கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளை செளகரியமான கூட்டிலிருந்து வெளியே தள்ளி, அவைகளைப் பயிற்றுவிப்பது போல..., தேவனும் நம்மைப் பயிற்றுவிக்கிறார் (உபா. 32:11).
நம் ஒவ்வொருவருக்குமான தேவனுடைய பயிற்சி முறைகளை நாம் கண்டுணர்ந்து, அந்நாட்களில் முறுமுறுக்காமல் இருப்போமாக.
உங்களை நன்றாகப் பயிற்றுவிக்க தேவனை அனுமதியுங்கள். அப்பொழுது..., உங்களாலும் மற்றவர்களை நன்றாகப் பயிற்றுவிக்க முடியும்!
ஜெபம்: கர்த்தாவே, நீர் என்னை எவ்விதம் பயிற்றுவிக்கிறீர் என்பதைக் கண்டறியவும், நீர் என்னைப் பயிற்றுவிக்கையில் அடங்கி இருக்கவும் எனக்கு உதவி செய்யும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment